ஏற்காடு, பிப். 13: ஏற்காடு மலை தெப்பக்காட்டில் குலதெய்வ கோயிலின் 3 சூலாயுதம் மாயமானதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஏற்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.ஏற்காடு டவுன் ஊராட்சி தெப்பக்காடு கிராமத்தில் சீராளன் பாட்டப்பன் கோயிலில் சாமி சிலை கிடையாது. மூன்று திரிசூலங்களை வைத்து, மக்கள் வழிபட்டு வருகின்றனர். தெப்பக்காடு அருகே உள்ள காக்கம்பாடியில் உள்ள 40க்கும் குடும்பத்தினருக்கும், இதுவே குலதெய்வ கோயிலாகும். இந்நிலையில் காக்கம்பாடி கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் புதிதாக கோயில் கட்ட முடிவு செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன் சீராள பாட்டப்பன் கோயிலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த ஒரு திரிசூலத்தை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்காடு தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் முருகேசன், ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் இரு கிராம மக்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன், டவுன் ஆர்ஐ சதீஸ் ஆகியோர் முன்னிலையில் காக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர், அந்த திரிசூலத்தை கொண்டுவந்து தெப்பக்காடு சீராள பாட்டப்பன் கோயிலில் வைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 6 மணியளவில் சீராளன் பாட்டப்பன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற தெப்பக்காடு கிராம மக்கள், அங்கு 3 திரிசூலங்களும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நேற்று காலை, 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏற்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, திருடு போன 3 சூலாயுதங்களை கண்டுபிடித்து தர கோரியும், ஏற்கனவே சூலாயுதத்தை எடுத்து சென்ற காக்கம்பாடியை சேர்ந்த அண்ணாமலச்சி, காமராஜ், மணி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து நேற்று மதியம் அங்கு வந்த டிஎஸ்பி சங்கரநாரயணன், ஏடிஎஸ்பி அன்பு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாயமான சூலாயுதங்கள் மீட்டுத்தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சமானாதமடைந்த கிராம மக்கள், முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.