சாமல்பள்ளம் அருகே பிரமாண்ட பெருமாள் சிலை 5 வது நாளாக நிறுத்தி வைப்பு

கிருஷ்ணகிரி, பிப்.13:  சாமல்பள்ளம் அருகே 5 நாட்களாக கோதண்டராமர் சிலை ஏற்றப்பட்ட லாரி நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கேதண்டராமர் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில், பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் நோக்கி சென்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அருகே உள்ள மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில், இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்றது. ஆனால் லாரியின் டயர்கள் மண்ணில் புதைந்து, தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அந்த சாலையில் மீண்டும் ஜல்லிக் கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கினர். அதன்பின், 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால் சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால் தொடர்ந்து சிலை ஏற்றப்பட்ட லாரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அந்த லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து 5 நாட்களுக்கு பின்னர் கடந்த 8ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு  கார்கோ இன்ஜின்கள் 3 மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சிலை ஏற்றப்பட்ட லாரியுடன் இணைக்கப்பட்ட பின்னர் லாரி புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையை சென்றடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் எழுப்பினர். அங்கிருந்து புறப்பட்ட லாரி கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டது. ஆனால் அங்குள்ள பாலத்தில் 350 டன் எடையுள்ள சிலை மற்றும் லாரியின் எடை 50 டன் என மொத்தம் சுமார் 400 டன் எடை கொண்ட லாரி பாலத்தை கடந்தால் பாலம் உடைந்துவிடும் என்பதால், அந்த பாலத்தில் லாரியை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மாற்று பாதை அமைக்க முடிவு செய்து, அதற்கான பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணி ஓரிரு நாளில் முடிவடையும் என்று தெரிகிறது. அதன் பின்னர் தான் லாரி புறப்படும் என்றும் அங்கிருந்த சிலை அமைப்பு குழுவினர் தெரிவித்தனர். இதனால் கடந்த 5 நாட்களாக ஒரே இடத்தில் சிலை ஏற்றப்பட்ட லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் செல்பவர்கள் அந்த சிலையை வணங்கிவிட்டு, அத்துடன் சேர்த்து புகைப்படம் எடுத்து சென்றவாறு உள்ளனர்.  

Related Stories: