கிருஷ்ணகிரி, பிப்.13: சாமல்பள்ளம் அருகே 5 நாட்களாக கோதண்டராமர் சிலை ஏற்றப்பட்ட லாரி நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கேதண்டராமர் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில், பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் நோக்கி சென்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அருகே உள்ள மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில், இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்றது. ஆனால் லாரியின் டயர்கள் மண்ணில் புதைந்து, தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அந்த சாலையில் மீண்டும் ஜல்லிக் கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கினர். அதன்பின், 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால் சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால் தொடர்ந்து சிலை ஏற்றப்பட்ட லாரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அந்த லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.