திருவண்ணாமலை, பிப்.6: திருவண்ணாமலை பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு தாசில்தார் மனோகரன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் ஹரக்குமார், பிடிஓக்கள் சஞ்சீவிக்குமார், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டம் தொடங்குவதற்காக முன்னதாக அதிகாரிகள் வேளாண்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில்,திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது. இந்த மாவட்டத்தில் வற்றாத நதிகள் என எதுவும் கிடையாது. மழை இல்லாததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரனம் வழங்கிட வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும்.மாவட்டம் முழுவதும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகையினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வறட்சி பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.