புதுச்சேரி, ஜன. 10: துவை சட்டசபையை முற்றுகையிட பேரணியாக சென்ற அரசு ஊழியர் சம்மேளனத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாத புதுச்சேரி அரசைக் கண்டித்தும் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் 9ம்தேதி சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று புதுவை கம்பன் கலையரங்கம் முன்பு பாலமோகனன் தலைமையில் திரண்ட சம்மேளனத்தினர் 700க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சட்டசபையை முற்றுகையிட வந்தனர். அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக போராட்டக் குழுவினரை ஜென்மராக்கி மாதா கோயில் எதிரே பெரியகடை போலீசார் பேரிகார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர், மோகன கிருஷ்ணன், ஆனந்தகணபதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.