புதுச்சேரி, டிச. 5: வில்லியனூர், தொண்டமாநத்தம், அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் ஓவியன் இருசப்பன் என்ற ஆறுமுகம் (32). இவர் மீது வில்லியனூரில் ரகளை, திருட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் காட்டேரிக் குப்பத்திலும் கத்தியைக் காட்டி பணம் பறித்த வழக்கு உள்ளது. தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஆறுமுகம் மீண்டும் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரை காட்டேரிக்குப்பத்தில் நுழைய தடைவிதிக்க சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார், மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளனர்.இதேபோல் சொக்கநாதன்பேட், அணைக்கரை வீதியில் வசிக்கும் ரவுடி தமிழ்மணி (23) என்பவரால் மீண்டும் ஊரில் அசம்பாவிதம் நிகழலாம் என்பதால் அவரை வடக்கு எஸ்பி ஜிந்தா உத்தரவின்பேரில் கோரிமேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அவரை ஊரில் நுழைய தடைவிதிக்குமாறு இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைத்துள்ளனர்.