புதுச்சேரி, நவ. 2: புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் என கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் (சிஎஸ்ஆர்) கீழ் தன்னார்வலர்களிடம் இருந்து கவர்னர் கிரண்பேடி நிதி பெற்று, 84 ஏரி, 600 குளங்கள், 24 தண்ணீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. விதிகளை மீறி சிஎஸ்ஆர் நிதியை வசூலித்து கவர்னர் மாளிகை முறைகேடு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி பதில் அளிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமியும் தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கிரண்பேடியும் பதில் அளித்திருந்தார். இந்நிலையில், கிராமப்பகுதியை போல் நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்கு பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட வேண்டும். தனியாக பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தேன். அதிகாரிகள் எப்படி பணி புரிகிறார்கள் என்பது குறித்து திடீர் ஆய்வு செய்யவும் முடிவு செய்திருந்தேன். அதன்படி, நேற்று நகரப்பகுதியில் உள்ள 2 இடங்களுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தேன். அது எனக்கு திருப்திகரமாக இல்லை.