புதுச்சேரி, அக். 12: அரியாங்குப்பத்தில் ஜமாத் நிர்வாகியை தாக்கிய 4 வாலிபர்கள் போலீசிடம் சிக்கியுள்ளனர். புதுவை, அரியாங்குப்பம், சண்முகா நகரைச் சேர்ந்தவர் முனவர்ஹான் (55). ஜமாத் தலைவரான இவரை சம்பவத்தன்று சுண்ணாம்பாறு படகுகுழாம் அருகே 7 பேர் கும்பல் கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. காயமடைந்த முனவர்ஹான் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முனவர்ஹான் உறவினர் அஷ்ரப் அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் 7 பேர் கும்பல் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இதில் முனவர்ஹானை அவரது உறவினரான சையது, ஜமில் உள்ளிட்ட 7 பேர் கும்பல் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு விவகார முன்விரோதம் காரணமாக அவரை தாக்கியது தெரியவந்தது.