புதுச்சேரி, அக். 12: அரியாங்குப்பம் ரவுடி அஸ்வின் குண்டாசில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுவை, அரியாங்குப்பம், ஓடைவெளியைச் சேர்ந்தவர் அஸ்வின் (28). ரவுடியான இவன் மீது முதலியார்பேட்டை சுப்பு, குயிலாப்பாளையம் ஜனா கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரியாங்குப்பத்தில் நகை திருட்டு வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் இருந்த அவரை குண்டாசில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா, போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தெற்கு எஸ்பி அப்துல் ரஹிம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார், அஸ்வினை குண்டாசில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரைத்தனர். அதை ஏற்று கலெக்டர் அபிஜித் விஜய் உத்தரவிட்ட நிலையில் காலாப்பட்டு சிறைக்கு சென்ற போலீசார் அந்நகலை அஸ்வினிடம் வழங்கி அவரை கைது செய்தனர். இதனால் ஓராண்டுக்கு அவர் ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மேலும் பல ரவுடிகள் மீது குண்டாசில் நடவடிக்கை எடுக்க காவல்துறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.