காஞ்சிபுரம், செப்.19: பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோடு மாவட்டம் வேடசந்தூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் எச். ராஜாவின் அநாகரிகமான பேச்சைக் கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில், நேற்று அலுவலக ஊழியர்கள் மற்றும் மண்டல தணிக்கை அலுவலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்: திருக்கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய பாஜ. தேசியச் செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் ஊழியர்கள் நேற்று காலை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பகல் 2 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டதும், கோயில் வாசலில் திருக்கோயில் பணியாளர்கள் சங்க தலைவர் தேவராஜன், செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அனைத்து ஊழியர்களும் கூடி எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர்.