நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... அக் 29,30ல் பலத்த மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : வங்கக்கடலில் மத்திய பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இது தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்தம் காரணமாக தமிழக கரையோர பகுதிகளில் அக் 29,30ல் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக். 26) வெளியிட்ட அறிவிப்பு:

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், இதர தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில் தலா 11 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், திருச்சி மாவட்டம் சமயபுரம், கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக் கடல் பகுதிகள்:

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.

இதன் காரணமாக,

27.10.2021, 28.10.2021: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

30.10.2021, 31.10.2021: தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: