மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சமஸ்கிருத மொழியில் ‘உடல்நலத்திற்கான பாலம்’ எனப்படும் ‘ஆரோக்கிய சேது’ (Aarogya Setu) என்னும் பெயர் கொண்ட செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கோவிட்-19 தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும். நோய் இருப்பவர்களின் தகவலை ஆராய்ந்து பார்த்து அவர்களில் யாரேனும் இந்த செயலியை பயன்படுத்தும் நபர் இருக்கும் அதே பகுதியில் உள்ளனரா என ஆராயும். இந்த செயலி உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து உங்களுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாக எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிய முடியும். இந்த சோதனையைப் பயன்பாட்டாளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்துகொள்ள முடியும். கோவிட்-19 தொற்று ஏற்பட பயன்பாட்டாளருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவ சேவையை நாட ‘ஆரோக்கிய சேது’ செயலி அறிவுறுத்தும். இதைப் பயன்படுத்த செல்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்ட பின், உங்கள் செல்பேசி எண்ணை இதில் பதிவு செய்யவேண்டும்.