அரசு அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டது ஏன்?

புதுடெல்லி: காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தை தடை செய்தது ஏன் என்பது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

காஷ்மீரில் செயல்படும்  ‘ஜமாத் இ இஸ்லாமி ஜம்மு காஷ்மீர்’ என்ற தீவிரவாத இயக்கத்தை 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாலும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு உதவியதாலும் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்பு ஏற்கனவே கடந்த 1975ம் ஆண்டில் மாநில அரசால் 2 ஆண்டுக்கும், கடந்த 1990ம் ஆண்டு ஏப்ரலில் மத்திய அரசால் 3 ஆண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அந்த அமைப்புக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அதிகாரிகள் கூறியதாவது:

காஷ்மீரில் செயல்படும் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியது ஜமாத் இ இஸ்லாமி. இது தவிர  பாகிஸ்தான் ஆதரவுடன் அனைத்து கட்சி ஹுரியத் மாநாட்டு கட்சியை உருவாக்கியதில் மூளையாகவும் இந்த அமைப்பு செயல்பட்டுள்ளது. ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு காஷ்மீரில் மிக அதிக தொண்டர்கள் உள்ளனர்.  குறிப்பாக, தெற்கு காஷ்மீரில் அதிகளவு உள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதம் அதிகரிக்க இந்த அமைப்பு காரணமாக இருந்துள்ளது. இது தவிர ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை தேர்வு செய்வது, நிதியுதவி செய்தல், தங்குமிடம் அளித்தல் போன்ற உதவிகளையும் இந்த அமைப்பு செய்துள்ளது. ஹிஸ்புல் முஜாகிதின் தலைவர் சயீத் சலாலுதின் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க ஆதரவு தெரிவித்து வருகிறார். அவர் தற்போது பாகிஸ்தானில் மறைந்து வாழ்கிறார். மதத்தின் பெயரால் நிதி வசூல் செய்யும் ஜமாத் இ இஸ்லாமி தேச விரோத நடவடிக்கைக்கு இதை பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: