தனியாக வசித்ததால் நடத்தையில் சந்தேகம் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்த ஆட்டோ டிரைவர்

சென்னை: தனியாக வசித்து வந்ததால் நடத்தையில் சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது மனைவியை பொதுமக்கள் கண் முன் கொடூரமாக கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் சேத்துப்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் டேவிட் (45). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 2004ம் ஆண்டு லேகா (38) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரியதர்ஷினி (13) மற்றும் தீபதர்ஷினி (12) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்கிடையே டேவிட் குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணத்தை டேவிட் குடித்தே அழித்து வந்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரின் ஊதாரித்தனத்தால் லேகா வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மனைவி வேலைக்கு செல்வது டேவிட்டுக்கு பிடிக்க வில்லை. அதே நேரம் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை டேவிட் அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த லேகா தனது இரண்டு மகள்களுடன் தனது கணவரை விட்டு பிரிந்து  பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பிறகு மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர மாமனார் வீட்டிற்கு டேவிட் சென்றுள்ளார்.

அப்போது அவர்கள், ‘எங்கள் வீட்டிற்கு வரவில்லை. தனியாக வீடு எடுத்து வசிப்பதாக கூறி டேவிட்டை வீட்டை விட்டு வெளியே செல்’ என்று கூறியதாக கூறப்படுகிறது. டேவிட் மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.இதற்கிடையே, சக ஆட்டோ ஓட்டும் நண்பர்கள், சேத்துப்பட்டு அப்பாராவ் கார்டனில் லேகாவை பார்த்ததாக டேவிட்டிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி டேவிட் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார்.  ஆனால் அங்கும் மனைவி மற்றும் மகள்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகு டேவிட் தனது மனைவி வசிக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தும்படி கூறி அழைத்துள்ளார். அப்போது, லேகா வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு குடிகாரனாக உள்ள உன்னிடம் இருக்க முடியாது என்று கூறி வீட்டிற்கு வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி ஒரு வருடமாக வேறு ஒரு நபரிடம் கள்ளத்தொடர்பில் இருப்பதால்தான் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வர மறுக்கிறார் என்று லேகா மீது டேவிட் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், நேற்று மதியம் தனது மனைவி லேகாவை கொலை செய்யும் நோக்கில் தயாராக கத்தியுடன் குடிபோதையில் சேத்துப்பட்டு அப்பாராவ் கார்டன் 2வது தெருவுக்கு டேவிட் சென்றுள்ளார்.

அப்போது, லேகா வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த டேவிட், தனது மனைவியை வழிமறித்து, என்னுடன் குடும்பம் நடத்த வா என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது நடுரோட்டிலேயே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் டேவிட், யாருடன் நீ குடும்பம் நடத்துகிறார் என்று கூறிக்கொண்டு, திடீரென தான் எடுத்து வந்த கத்தியால் மனைவி லேகாவை சரமாரியாக குத்தி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத லேகா காப்பாத்துங்கள்.... காப்பாத்துங்கள்....  என்று ரத்த வெள்ளத்தில் உதவி கேட்டு அலறி துடித்தார். உடனே, சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போதும் விடாமல்  டேவிட் கத்தியால் தனது மனைவியை கொடூரமாக குத்தி சம்பவ இடத்திலேயே கொலை செய்தார். பிறகு டேவிட் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் பொதுமக்கள் நாலாபுறமும் சுற்றி வளைத்து குடிபோதையில் இருந்த டேவிட்டை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் விரைந்து  வந்து ெபாதுமக்களிடம் இருந்து டேவிட்டை மீட்டனர். தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட லேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆட்டோ டிரைவர் டேவிட்டை கைது செய்தனர். டேவிட் குடிபோதையில் இருந்ததால் அவரிடம் போலீசார் ேநற்று நள்ளிரவு வரை விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.  பொதுமக்கள் கண் முன்பாக நடந்த இந்த கொலை சம்பவத்தால் சேத்துப்பட்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதரவற்ற பெண் குழந்தைகள்

தாய் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் இரண்டு பெண் குழந்தைகளும் கதறி துடித்தனர். தந்தையும் கைதானதால் குழந்தைகள் ஆதரவற்று உள்ளனர். இது, அப்பகுதியில் வசிப்போரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: