மெல்போர்ன்: இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பெர்த் மைதான ஆடுகளம் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணிக்கு அதிக சாதகமானதாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றியை பதிவு செய்ததால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், 2வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த நிலையில், பெர்த் ஆடுகளம் குறித்து பான்டிங் நேற்று கூறியதாவது: அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. இரு அணிகளுமே கடைசி வரை போராடியது பாராட்டுக்குரியது. இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இந்த வெற்றிக்கு தகுதியான அணி என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த தவறிவிட்டனர். வெற்றிக்கு மிக அருகே நெருங்கிய நிலையில் வாய்ப்பை தவறவிட்டது சற்று ஏமாற்றமாக இருந்தது. இதில் இருந்து அவர்கள் விரைவாக மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.