அதிக ஓட்டு வாங்கி காட்டுவேன் தமிழக பாஜ தலைவராக தயார்: எஸ்.வி.சேகர் பேட்டி

திருவில்லிபுத்தூர்: வாய்ப்பு கொடுத்தால் தமிழக பாஜ தலைவர் பதவியை ஏற்க தயார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.விருதுநகர்  மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை தரிசனம் செய்தார். அவர் சென்ற  பின்னர் பாஜ பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தரிசனம் செய்தார். மேலும், அங்கிருந்த சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்தார்.  நிருபர்களிடம் எஸ்.வி.சேகர் கூறுகையில், ‘‘ராஜபாளையத்தில் நடக்கும் பாஜ மாநில செயற்குழுவுக்கு எனக்கு  அழைப்பு இல்லை. என்னைக் காட்டிலும்  பிரபலமானவர்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். தமிழக பாஜ தலைமை என்னை பயன்படுத்தவில்லை. என்னைப் பயன்படுத்திக் கொண்டால், அவர்களுக்கு  நல்லது. வாய்ப்பு கிடைத்தால், தமிழக பாஜ தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்வேன்.

இப்போது இருக்கும் ஓட்டு  சதவீதத்தை விட, அதிகமாக ஓட்டு வாங்கி காட்ட முடியும்.  பாஜ சரியான  பாதையில் போய் கொண்டிருக்கிறது. 2019ல் மோடி மீண்டும் ஆட்சிக்கு  வருவார்’’ என்றார்.நிருபர்கள் எச்.ராஜா விவகாரம் குறித்து கேட்டதற்கு, ‘அவர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டியது எச்.ராஜாவின் கடமை’  என்றார். நடிகர் கருணாஸ் கைது குறித்த கேள்விக்கு, ‘எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக பார்க்கக் கூடாது’ என்றார். ‘தமிழிசை சவுந்தரராஜன் தலைமையை  ஏற்கிறீர்களா? இல்லையா’ என கேட்டதற்கு, ‘அவர் தலைமையை ஏற்பதை தெரிவிக்க, தினமும் அவர் வீட்டின் முன் போய் நிற்க முடியுமா’ என்றார்.தமிழக பாஜ தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருக்கும்போதே, நடிகர் எஸ்.வி.சேகர் தமிழக பாஜ தலைமையை ஏற்க தயார் என தெரிவித்துள்ளது, அக்கட்சியினர்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: