சென்னை: மம்தாவை பொறுத்த வரை பாஜவுக்கும், மதவாதத்துக்கு எதிரான கட்சிகளை சந்தித்து அவர்களை ஒருங்கிணைப்பில் ஈடுபட்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். பெரும்புதூர் ஒன்றியம் தத்தனூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பொது மக்களின் பிரச்னைகள் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவினர் உடன் சந்திரசேகர் ராவ் மற்றும் மம்தா பானர்ஜி போன்றவர்கள் சந்திப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பது மரியாதை நிமித்தமானது. அப்போது அரசியல் குறித்து பேசுவதும் வழக்கமான ஒன்று தான். தமிழக காங்கிரசை பொறுத்த வரை திமுகவுடன் கூட்டணி என்பது தற்போது வரை தொடர்கிறது. மேலும் அவர்கள் சந்தித்து கொள்வதால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.