ஸ்னூக்கர் அகாடமி என்ற பெயரில் ஹூக்கா பார் நடத்திய 4 பேர் கைது: உரிமையாளருக்கு வலை

பெரம்பூர்: புரசைவாக்கம் பகுதியில் ஸ்னூக்கர் அகாடமி என்ற பெயரில்  ஹூக்கா பார் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  தலைமறைவாக உள்ள அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர். புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஸ்னூக்கர் அகாடமி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர்கள் அதிகளவில் வந்து செல்வதாகவும், அங்கு போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் புரசைவாக்கம் பிரிக்கிளின் ரோடு பகுதியிலுள்ள ஒரு காம்ப்ளக்சில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது,  ஸ்னூக்கர் அகாடமி என்ற பெயரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹூக்கா  எனும் போதைப் பொருளை அங்குள்ள இளஞர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பாரில் வேலை செய்த  ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் (24), சுமித் (22), கிஷோர் (21) துரை (எ) திம்பு (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அங்கிருந்து ஹூக்கா போதைப்பொருள் 29  பாக்கெட், குட்கா 25 பாக்கெட், 24 செல்போன்கள், ஸ்வைப்பிங் மெஷின் 2  மற்றும் ரூ.22 ஆயிரம்  உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், ஸ்னூக்கர் அகாடமி என்ற பெயரில் வாலிபர்களுக்கு ஹூக்கா போதைப் பொருளை இவர்கள் வழங்கி வந்ததும், தினமும் பல வாலிபர்கள் இங்கு வந்து போதைப்பொருளை பயன்படுத்தியதும் தெரியவந்தது. அங்கு வாடிக்கையாளர்களாக வந்த 16 பேரை எச்சரித்து அனுப்பிய போலீசார், ஹூக்கா பாரில் பணிபுரிந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சட்டவிரோதமாக இந்த பாரை நடத்திய மண்ணடி பகுதியை சேர்ந்த பெரோஸ் (40) என்பவரை தேடி வருகின்றனர்….

The post ஸ்னூக்கர் அகாடமி என்ற பெயரில் ஹூக்கா பார் நடத்திய 4 பேர் கைது: உரிமையாளருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: