வாகனங்களை வழிமறித்து காரை எட்டி உதைத்த காட்டு யானை: தமிழக-கர்நாடக எல்லையில் பரபரப்பு

சத்தியமங்கலம்: தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானை, காரை காலால் எட்டி உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுகின்றன. காட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து தின்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசனூர் அடுத்துள்ள தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் குட்டியுடன் முகாமிட்ட 2 காட்டு யானைகள் சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்தன.அப்போது சோதனைச்சாவடி வழியாக வந்த ஒரு காரை யானைகள் சுற்றி வளைத்தன. இதனால் மிரண்டு போன காரில் வந்த பெண் பயணிகள் அச்சமடைந்து காரை விட்டு இறங்கி தலைதெறித்து ஓடினர். காரில் இருந்து இறங்கி ஓட முடியாத பெண் ஒருவரை ஆண் ஒருவர் வாயை பொத்தி குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு ஓடினார். பின்னர் காரின் அருகே வந்த யானைகள் காரை காலால் எட்டி உதைத்தது. தொடர்ந்து, தனது குட்டியுடன் யானைகள் நீண்ட நேரம் நின்றிருந்ததால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அரை மணி நேரம் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் தனது குட்டியை அழைத்து சென்றதை தொடர்ந்து வாகனங்கள் மீண்டும் புறப்பட்டு சென்றன. இதையடுத்து வனச்சாலை வழியாக செல்லும் வாகனங்களை மித வேகத்தில் இயக்குமாறும் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

The post வாகனங்களை வழிமறித்து காரை எட்டி உதைத்த காட்டு யானை: தமிழக-கர்நாடக எல்லையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: