ராதாபுரம் அருகே இந்த கல்வியாண்டு முதல் மீன்வள தொழில்நுட்ப கல்லூரியை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

ராதாபுரம்,ஜூன் 1: ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் மீன்வள தொழில்நுட்ப கல்லூரி தொடங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சபாநாயகர் அப்பாவு, நெல்லை கலெக்டர் சுகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தமிழ்நாடு அரசு மீன்வள பல்கலைகழகத்தின் சார்பில் ரூ.27.76 கோடியில் புதிய மீன்வள தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய தொழில்நுட்பக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

சமூகரெங்கபுரத்தில் 14 ஏக்கரில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் மாணவர்களுக்கான வகுப்பறைகள், மாணவர்கள் விடுதி போன்ற பல்வேறு கட்டிடங்கள் நல்ல நிலையில் இருப்பதால் அவற்றில் தற்காலிகமாக மீன்வள தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக்) தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய கட்டிடம் மீன்வள தொழில்நுட்ப கல்லூரிக்கு கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட வல்லுநர்களை கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் ஒப்புதல் பெற்று விரைவாக பணிகள் தொடங்கப்படும்.

இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டிடத்தில் வரும் கல்வியாண்டில் மீன்வள தொழில்நுட்ப கல்லூரியை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடனர்.

ராதாபுரம் பகுதியில் உள்ள மீனவ கிராம மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆர்ஐஜி மற்றும் கடல்சார் சான்றிதழ், பட்டயப்படிப்பு பிரிவுகள் ஏற்படுத்தும் போது கடல் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகளவு கிடைத்து அவர்கள் வாழ்க்கை தரம் உயரும். அவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். கடல் சார்ந்த தொழில்நுட்ப படிப்புகள் படித்துவிட்டு தூத்துக்குடி துறைமுகம் போன்ற துறைமுகங்களிலும் மற்றும் கப்பல்களிலும், கடல் சார்ந்த பல்வேறு தொழில்களிலும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

எனவே இப்பகுதியில் இக்கல்வி நிறுவனம் அமையும் பட்சத்தில் இப்பகுதி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதவற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆய்வின் போது மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, ராதாபுரம் தாசில்தார் மாரிசெல்வம், சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள், ஒன்றிய கவுன்சிலர் காந்திமதி, பாலன், மவுலின், அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி மற்றும் பலர் இருந்தனர்.

The post ராதாபுரம் அருகே இந்த கல்வியாண்டு முதல் மீன்வள தொழில்நுட்ப கல்லூரியை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: