புதுக்கோட்டை, ஏப்.14: புதுக்கோட்டை வட்டம், பெருங்களூர் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் விவாசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் மற்றும் திட்டப்பயன்கள் எடுத்துரைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வட்டம், பெருங்களூர் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்) ரவிச்சந்திரன் கலைஞர் திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் பேட்டரி தெளிப்பான்,
மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் தார்பாய் மற்றும் தொகுப்பு வேளாண் கருவிகள், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்க திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் மரக்கன்றுகள், நுண்நீர் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் நுண்நீர் பாசன கருவிகள் விவசாயிகளுக்கு முகாமில் வழங்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், திட்டங்களில் பயன்பெறும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கண்காட்சி அமைக்கப்பட்டு பாரம்பரிய நெல் ரகங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள், உயிர் கட்டுப்பாட்டு காரணிகள், நிலக்கடலை மற்றும் உளுந்து ரகங்கள் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் விவசாயிகள் பார்க்கும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
The post புதுகை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் விவசாயிகளுக்கு மானியத்தில் நுண்நீர் பாசன கருவிகள் வழங்கல் appeared first on Dinakaran.