சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வறட்சி காலத்தில் நீருக்காக போராடுகிறோம். ஆனால், இயற்கையின் கொடையாய் அளிக்கப்பட்ட நீரை உபரி நீராக கடலில் கலக்க விடுகிறோம். நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் உணர்ந்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம். ஏரிகள், குளங்களை புனரமைத்து முறையாக பராமரித்திட புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டம் நிரந்தர தீர்வாக நீண்ட நாள் பலனளிக்கும் வகையில் அமைதல் வேண்டும். மேலும் வறட்சி காலத்தில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், வெள்ளக்காலத்தில் நீர்தேக்கி பயனளிக்கும் வகையிலும் அத்திட்டம் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.