திருவாரூர், ஏப். 17: திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் ரூ.81 லட்சம் மதிப்பில் புதிதாக செய்யப்பட்ட பக்தவத்சல பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. திருவாரூர் அருகே, திருக்கண்ணமங்கையில் அபிஷேகவல்லி சமேத பக்தவச்சல பெருமாள் கோயில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலானது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இக்கோயிலில் நடைபெறும் விழாவில் முக்கியமான நிகழ்ச்சியாக சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தினந்தோறும் காலையில் பெருமாள் பல்லக்கில் வீதியுலாவும், இரவு வாகன புறப்பாடும் நடைபெற்று 9ம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இக்கோயிலுக்கான தேரோனது சிதிலமடைந்ததையடுத்து அரசு சார்பில் புதிதாக தேர் செய்வதற்கு ரூ.81 லட்சத்து 80 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய தேர் செய்யும் பணி நடைபெற்றது. புதிதாக செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளோட்டம் நடைபெற்றது. மேலும் இந்த தேர் வெள்ளோட்டத்தையொட்டி முன்னதாக தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கீழவீதி நிலையடியிலிருந்து காலை 10.30 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து மீண்டும் நிலை அடியில் நிறுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பக்தவச்சல பெருமாள் பக்தர் குழுவினர் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
The post திருக்கண்ணமங்கை பெருமாள்கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் appeared first on Dinakaran.
