திரளான பக்தர்கள் பங்கேற்பு: ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

திருவிடைமருதூர், ஜூலை 31: ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, புத்தூர் ஊராட்சி, பூந்தோட்டம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாத தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டிற்குரிய விழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. பின்னர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் கோயில் குளத்தில் இருந்து சக்தி கரகம், வேல், அலகு காவடி, பால்குடம் எடுத்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலபிஷேகமும், மகாதீபாராதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விரதம் இருந்த 50க்கும் மேற்பட்ட திரளான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் மண்ணியாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், வேல், பால்குடம், அலகு காவடி எடுத்து வந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவுபெற்றது.

The post திரளான பக்தர்கள் பங்கேற்பு: ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: