சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

 

சத்தியமங்கலம், ஜூன் 13: மொத்தமாக 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, கரடி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் காணப்படுகின்றன.

வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து கண்டறிவதற்காக ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என ஆண்டுக்கு இருமுறை வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி மழைக்காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களில் நேற்று தொடங்கியது.

இப்பணியில் 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஜிபிஎஸ் கருவி, தொலைநோக்கி, காம்பஸ் உள்ளிட்ட அதி நவீன கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். பவானிசாகர் வனப்பகுதியில் பதிவான புலியின் கால் தடத்தை வனத்துறையினர் கணக்கெடுப்பின்போது ஆவணங்களில் பதிவு செய்தனர். நேற்று தொடங்கி ஜூன் 17ம் தேதி வரை 6 நாட்களுக்கு கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு பின்னர் கணக்கெடுப்பு விவரங்கள் சென்னை தலைமை உயிரின வனப்பாதுகாவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: