கோவில்பட்டியில் கைகளில் காய்கறிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

கோவில்பட்டி, ஏப். 27: கோவில்பட்டியில் கைகளில் காய்கறிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி வட்டார விவசாயிகள் கைகளில் காய்கறிகளுடன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவன தலைவர் தமிழரசன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதியில்லை. கோரிக்கை மனு அளித்துக் கொள்ளலாம் என்றனர். அப்போது விவசாயிகள் கோஷங்கள் எழுப்பத்தான் அனுமதியில்லை. நாங்கள் விளைவிக்கிற காய்கறிகள் வீணாவதை நினைத்து கண்ணீர் வடிக்கலாம் எனக்கூறி அழுவதுபோல் கோஷமிட்டனர்.

அப்போது தமிழரசன் பேசுகையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்கு முன்பு நடந்த விபத்தில் பெண் அதிகாரி உயிரிழந்தார். இதையடுத்து பேருந்து நிலையத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், அனைத்து பேருந்துகளும், பேருந்து நிலையத்துக்குள் சென்று வர உத்தரவிட்டார். மேலும், இது கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், கோவில்பட்டி ஊருக்குள் இருந்த காய்கறி சந்தை இடிக்கப்பட்ட நிலையில், புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் தற்காலிக சந்தை செயல்படும் என அறிவித்து செயல்படுத்தி உள்ளனர். இந்த பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். அதே நேரத்தில் காய்கறிகள் இறக்கி ஏற்ற கனரக வாகனங்கள் முதல் சுமை வாகனங்கள் வரை வந்து செல்லும். இதனால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்படும். விபத்துகளும் நடக்க வாய்ப்பு உள்ளது.

வியாபாரிகள் ஒன்று சேர்ந்து திட்டங்குளம் ஊராட்சி பகுதியில் சொந்தமாக இடத்தை வாங்கி உள்ளனர். அதில் தற்காலிக சந்தையை செயல்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி திட்டங்குளம் ஊராட்சி பகுதியில் வியாபாரிகளின் இடத்திலேயே தற்காலிக சந்தை செயல்பட சிறப்பு அனுமதி வழங்க வேண்டும், என்றார். பின்னர் அவர்கள், தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணனிடம் தங்களது மனுக்களை வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் பெஞ்சமின் பிராங்களின், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ரவிக்குமார், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன், கருத்துரிமை பாதுகாப்பு செல்வம் என்ற செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்க தலைவர் பால்ராஜ் தலைமையில் செயலாளர் செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தை கனிமொழி எம்பி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்து தற்காலிக சந்தையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். மொத்த வியாபாரிகள் அரசு ஒதுக்கிய தற்காலிக சந்தையில் வியாபாரம் செய்தால் காய்கறி தரமாட்டோம் என கூறுகின்றனர். தற்போது மதுரையில் இருந்து நேரடியாக காய்கறிகள் வாங்கி மக்களுக்கு குறைவான விலையில் நிறைவான சேவையை வழங்கி வருகிறோம். இதற்கிடையே, அனுமதி பெறாமல் செயல்பட்ட சந்தைக்கு அரசு அதிகாரிகள் தடை விதித்தனர். இதையடுத்து பல வியாபாரிகள் புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாக தற்காலிக சந்தைக்கு வர தயாராக இருந்தும், அவர்களை செல்லவிடாமல் தடுக்கின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு வியாபாரிகளையும், விவசாயிகளையும் வரவிடாமல் தடுப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post கோவில்பட்டியில் கைகளில் காய்கறிகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: