ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வார வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

ஈரோடு, ஆக.24: ஈரோட்டில் உள்ள ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்து அகற்றிய பின் தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் ஒய்யாங்காடு பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1ல் சூரியம்பாளையம் குமிலன்பரப்பு கிராமத்தில் உள்ள நொச்சிபள்ளம் என்ற ஓடை செல்கின்றது.

இந்த ஓடையில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளது. ஒரு சிலர் வீடுகள் கட்டியும், விவசாயம் செய்த, தொழிற்சாலைகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் ஓடைகளில் செல்லும் மழைநீர் தடைபட்டு அருகில் உள்ள வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் கலந்து பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில், மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் தூர்வாரும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. ஓடையை ஆய்வு செய்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அதன் பிறகு தூர்வாரினால் மட்டுமே உரிய பயன் கிடைக்கும். மாறாக ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் தூர்வாரினால் மழைநீர் மீண்டும் குடியிருப்புகளுக்குள்தான் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வார வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: