ஓஎம்ஆர் சாலையில் நிறுத்தப்பட்ட புறவழிச்சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜிவ் காந்தி சாலை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 6 வழிப்பாதையாகவும், சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை 4 வழிப்பாதையாகவும் உள்ளது. இச்சாலையில் படூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. படூர் – தையூர் இடையே ஒரு புறவழிச் சாலையும், திருப்போரூர் – ஆலத்தூர் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதையொட்டி படூர் – தையூர் இடையே 4.67 கிமீ தூரத்துக்கு சாலை அமைகிறது. திருப்போரூர் – ஆலத்தூர் இடையே 7.45 கிமீ தூரத்துக்கு சாலை அமைக்க உள்ளது. 2 புறவழிச்சாலைகளுக்கும் சேர்த்து மொத்த திட்ட செலவாக ரூ.465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு சாலை அமைக்க படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி உள்பட 13 கிராமங்களில் நிலம் கையகப் படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக படூர், கேளம்பாக்கம் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடக்கிறது. இச்சாலையின் குறுக்கே கேளம்பாக்கம் – கோவளம் சாலை வருவதால் அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பாலப்பணிகள் முடிந்த பிறகும், புறவழிச்சாலை அந்த பாலத்துடன் இணைக்கவில்லை.அதேபோல், அடுத்த கட்டமாக திருப்போரூர் – ஆலத்தூர் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. காலவாக்கம் கிராமத்தில் தொடங்கப்பட்ட 2வது புறவழிச்சாலை பணிகள் இதுவரை முடிக்காமல் உள்ளதாகவும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈடுத் தொகை இதுவரை வழங்காததால் பணிகள் தொடங்கவில்லை என கடந்த பிப்ரவரி மாதம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதால் இப்பணிகள் மேலும் முடங்கின. இதை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய நஷ்டஈட்டுத்தொகை உடனடியாக வழங்கப்பட்டது. தற்போது நில உரிமையாளர்களிடம் இருந்து சாலை அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாய நிலங்களில் இருந்த வரப்புகள் அகற்றப்பட்டு, கிணறுகள் மூடப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், சாலையின் மட்டம் உயர்த்தும் பணிகள் நடக்கிறது. விரைவில் இந்த புறவழிச்சாலை அமைக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post ஓஎம்ஆர் சாலையில் நிறுத்தப்பட்ட புறவழிச்சாலை பணிகள் மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: