இளநீர் கூடுகளை சாலைகளில் வீசினால் விற்பனை வாகனம் பறிமுதல் பழநி நகராட்சி எச்சரிக்கை

 

பழநி, ஜூலை 10: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரம் பகுதியில் ஏராளமான கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல் இளநீர் விற்பனை வாகனங்களும் அடிவார பகுதியில் அதிகளவில் நடமாடுகின்றன. சைக்கிள், பைக் மற்றும் தள்ளுவண்டிகளில் வைத்து இளநீர் விற்பனை செய்யப்படுகின்றன. இளநீரை குடித்தவுடன் அதன் கூடுகளை ஆங்காங்கே வீசி விடுகின்றனர். இதனை உண்ண வரும் மாடு போன்ற விலங்குகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன.

தவிர, சாலைகளில் கிடக்கும் இளநீர் கூடுகளில் பைக் போன்ற டூவீலர்களை ஏற்றி பலர் கீழே விழுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் பழநி நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் நேற்ற கோயிலை சுற்றி உள்ள இளநீர் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதன்படி நாள்தோறும் மாலை 5 மணிக்கு பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பெரியப்பா நகரில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கிற்கு சென்று சேகரமாகும் கழிவுகளை கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக பதிவேடுகள் பராமரிக்கப்படுமென்றும், கழிவுகளை ஒப்படைக்காத இளநீர் விற்பனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமென்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post இளநீர் கூடுகளை சாலைகளில் வீசினால் விற்பனை வாகனம் பறிமுதல் பழநி நகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: