அணைக்கட்டில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி

ஈரோடு, செப்.25: ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். ஈரோட்டில் மாநகராட்சியில் பெரும்பள்ளம் ஓடையின் குறுக்காக சூரம்பட்டி அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 12 ஏக்கர் பரப்பளவும், 7 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் மழை நீரும், கீழ் பவானி வாய்க்காலின் கசிவு நீர் சேகராமாகும். இந்த அணையில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாகும்.

இதன்மூலம் ஈரோடு, மொடக்குறிச்சி பகுதியில் 2,450 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது அணைக்கட்டு முற்றிலுமாக ஆகாயத்தாமரை ஆக்கிரமித்தும் தண்ணீர் ஓட்டமும் பாதிக்கப்பட்டு வந்தது. இதேபோல், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலும் செடி, கொடிகள் ஆக்கிரமித்தும், குப்பைகள் சூழ்ந்தும் காணப்பட்டது. இதனால், சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாய தாமரை அகற்றவும், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை தூர்வாரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பேரில், சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வரை 13 கி.மீ தூரத்திற்கு தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் ரூ.21 லட்சம் மதிப்பில் 4 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணி துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சூரம்பட்டி அணைக்கட்டில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை ஈரோடை அமைப்பு சார்பில் அகற்றும் பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்து ஆகாய தாமரைகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர் சசிக்குமார், டாக்டர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அணைக்கட்டில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி appeared first on Dinakaran.

Related Stories: