மும்பை: சமீபத்தில் அமிதாப் பச்சனை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார் பாலிவுட் நடிகர் நானா படேகர். அமிதாபின் கேள்விக்கு பதிலளித்த நானா படேகர், ‘‘நான் உண்மையில் திரைப்படத் துறையைச் சேர்ந்தவன் அல்ல. நான் இங்கு வந்து, என் வேலையைச் செய்துவிட்டு, பிறகு எனது கிராமத்துக்கு திரும்பி ஓடிவிடுவேன். நான் இங்கு நடக்கும் பார்ட்டிகளில் கலந்துகொள்பவன் அல்ல. அந்த வாழ்க்கை முறை எனக்குப் பிடிக்காது.
அந்த கலாசாராம் என் இயல்பு அல்ல. நான் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன், நான் எப்போதும் ஒரு கிராமத்து மனிதனாகவே இருப்பேன். அங்குதான் நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன். அங்கு விவசாயம் செய்கிறேன்’’ என்றார். தொடர்ந்து அவர் கூறும்போது, ‘‘அமித் ஜி (அமிதாபை பார்த்து), நான் விரும்பியதை விட மிக அதிகமாகப் பெற்றுள்ளேன். வாழ்க்கை எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது.
உங்கள் தேவைகள் குறைவாக இருக்கும்போது, எல்லாம் மிகவும் எளிதாகிவிடும். நகரத்தில், மக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி சுவர்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் வசிக்கும் இடத்தில், எங்களைச் சுற்றி மலைகள் உள்ளன, நாங்கள் அவற்றுக்கு மத்தியில் வாழ்கிறோம். அங்கு வாழ்க்கை மிகவும் எளிமையானது’’ என்றார். அவரது பேச்சைக் கேட்டு பாராட்டிய அமிதாப், ‘‘நீங்கள் சொன்னது ஒரு அற்புதமான விஷயம்’’ என்று நெகிழ்ச்சியடைந்தார்.
