கொச்சி: மோகன்லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள `திரிஷ்யம் 3’ என்ற படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கொச்சியில் நடந்தது. அப்போது நிருபர் ஒருவர், ‘நீங்கள் நடித்த ‘திரிஷ்யம்’ படத்தை பார்த்துவிட்டு பல்வேறு கிரிமினல் விஷயங்களில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று மோகன்லாலிடம் கேட்டார்.
உடனே அந்த நிருபரிடம் மோகன்லால், ‘அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அந்த நிருபர், ‘கிரிமினல் மைண்ட் இருப்பவர்கள் அப்படி யோசிப்பார்கள்’ என்று சொன்னார். பிறகு பதிலளித்த மோகன்லால், ‘அதுதான் விஷயம். ஜார்ஜ் குட்டி ஒரு கிரிமினல் அல்ல. நான் அவரை ஒருபோதும் அப்படி பார்த்தது இல்லை. இது ஒரு படம். அதை ஆடியன்ஸ் நம்பும்படி கொடுக்க வேண்டும்.
’திரிஷ்யம்’ படம் திரைக்கு வருவதற்கு முன்பு கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு வீட்டில் கொலை நடந்தால், அந்த வீட்டின் செப்டிக் டேங்கை திறந்து பார்ப்பார்கள். அதில்தான் சடலம் இருக்கும். ‘திரிஷ்யம்’ படத்தை பார்த்துவிட்டு அதுபோல் சிந்திப்பது சரியில்லை. ஏனெனில், திரைப்படங்கள் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில், அப்படத்தில் இடம்பெற்ற மற்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்றார்.
