டெல்லி: பிரதமர் மோடி பற்றி சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான வீடியோ வெளியானதாகக் கூறி, இந்தியாவுக்கான மெட்டா தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வந்த பதிவுகள் தொடர்பாக அதன் நிறுவனமான மெட்டா மீது நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தின் சைபர் க்ரைம் போலீசாருக்குப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அருண் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரதமர் மோடியின் வீடியோக்கள், மெட்டா நிறுவனத்தின் கீழ் இருக்கக்கூடிய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் அதிகம் பகிரப்பட்டதாகவும், அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் மெட்டா நிறுவனம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துப் புகாரளிக்கப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் ரெட்டி மற்றும் பாஜகவின் ஆதரவாளர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது மெட்டாவின் இந்தத் தலைவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்த நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்ற தகவலையும் ஹைதராபாத் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பிரதமரின் வீடியோ மிக வேகமாக வைரலாக மாறியதாகவும், குறிப்பாக அவரின் சித்தரிக்கப்பட்ட அந்த ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டதாகவும் அந்தப் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரதமருக்கு எதிரான வீடியோக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
