எல் நினோவின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு

 

சென்னை: தமிழ்நாட்டில் எல் நினோ தாக்கம், பாதிப்பு குறித்து கண்காணிக்க நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல் நினோவின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அங்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க சிறப்புக் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், அண்ணா பல்கலைக்கழக கால நிலை மாற்றத்துறை தலைவர் காமினி, சென்னை ஐஐடி நீர் மேலாண்மைத்துறை பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழு உறுப்பினர் அறிவுடை நம்பி அப்பாதுரை, தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவன ஆலோசகர் ரமேஷ் ராமசந்திரன், வானிலை ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட 7 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் எல் நினோவால் ஏற்படும் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தை கண்காணித்து பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையிடம் ஆலோசனை வழங்குதல், எந்தவொரு பேரிடரையும் உரிய நேரத்தில் எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வறட்சி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகள் இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

2026-2027 மற்றும் 2027, 2028 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இக்குழு செயல்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: