பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவதா? காவல்துறையினர் கண்ணியம் தவறக்கூடாது: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிகையாளர்களை தாக்கியதோடு, நாக்கை துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபுவின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

* ‘சபாநாயகர் விதி மீறியுள்ளார்’
விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. எந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ கைது செய்யப்படும்போது, குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட அவைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு மட்டுமல்ல, விதிமுறைகளும் ஆகும்.

இதை மறந்து விட்டு, ஆளும் கட்சிக்கு சாதகமாக, சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. இனியாவது நாடாளுமன்ற நடைமுறைகளை பேரவைத் தலைவர் கடைபிடித்து நடுநிலையோடு செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Related Stories: