கரூர், ஜூலை. 21: அமராவதி அணையில் இருந்து உரிய நீரை திறக்க ஆவண செய்யவேண்டுமென மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த முகாமில், கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பொதுமக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: நாங்கள் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதி கூடலூர் மேல்பாகம் கிராமம், கூடலூர் கீழ்பாகம் பிட்-1 கிராமம், கூடலூர் கீழ்பாகம் பிட்-2 கிராமம், சின்னதாராபுரம் கிராமம். தெ.வெங்கிடாபுரம் கிராமம், சூடாமணி கிராமம், தொக்குப்பட்டி கிராமம். எலவனூர் கிராமம். கிராமம். புஞ்சைகாளகுறிச்சி கிராமம். நஞ்சைகாளகுறிச்சி பு.அணைப்பாளையம் கிராமம், தும்பிவாடி கிராமம், விஸ்வநாதபுரி கிராமம். நாகம்பள்ளி கிராமம் ஆகிய மேற்கண்ட கிராமங்களில் சுமார் 10,000 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.எங்களின் குடிநீர் ஆதாரம் அமராவதி ஆறு.
மேற்படி அமராவதி ஆற்றில் கடந்த 6 மாதங்களாக தண்ணீர் இல்லை இதனால் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்தவெளி கிணற்றில் தண்ணீர் இன்றி காய்ந்துவிட்டது. இதனால் எங்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கால்நடைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு திறக்கப்பட்டு தாராபுரம் பகுதியோடு தண்ணீர நின்றுவிட்டது. அணையும் அடைக்கப்பட்டுவிட்டது. இதே போல் கடந்த ஆண்டுகளிலும் குறைந்த அளவு தண்ணீர் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டு எங்கள் பகுதிக்கு வரும் முன்னரே அணை அடைக்கப்பட்டது. ஆதலால் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக உடனே அமராவதி அணையில் இருந்து உரிய நீரை திறக்க ஆவண செய்ய வேண்டும்.
வரும் காலங்களில் அமராவதி அணை திறக்கப்படும்போது ஆற்றின் நீர் கரூர் வரை வருவதற்கு தாங்கள் உரிய நடவடிக்கையெடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை காத்து பாரபச்சமின்றி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
