மருதூர்-உமையாள்புரம் வரை இருவழிச்சாலை வசதியுடன் கதவணை திட்டம்

குளித்தலை, ஜூலை 21: தமிழ்நாடு முதலமைச்சருக்கு குளித்தலை காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வலையபட்டி டாக்டர் ஜெயராமன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தை ஒட்டிள்ள குளித்தலை மற்றும் முசிறி வட்டாரங்களில் அகண்ட காவிரியாக பாய்ந்து வரும் காவிரி ஆற்றின் தென்கரையில், மருதூர் முதல் வடகரையில் உமையாள்புரம் வரை தமிழ்நாடு அரசின் அரசு நீர்வளத்துறை தயாரித்துள்ள இருவழிச்சாலை வசதி மற்றும் தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர் கதவுகள் வசதியுடன் கூடிய கதவணை திட்டத்தினை அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் நடப்பு 2026-2027 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு மத்திய அரசு நிதி அல்லது நபார்ட் நிதி அல்லது வேறு ஏதேனும் தக்க நிதியாதார நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும்.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குள் குளித்தலை, தோகமலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களில் உள்ள 8 அரசு பொதுப்பணி நீர்வழித்துறை ஏரிகள் மற்றும் பிரதான பஞ்சாயத்து ஏரிகளிலும் மழைக்காலங்களில் வரும் காவிரி வெள்ள உபரி நீரை உயர் அழுத்த மின்சார மோட்டார் பம்பு குழாய்கள் மூலம் நிரப்பக்கோரும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க நடப்பு 2026-2027 நிதியாண்டில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.அகண்ட காவிரியாக இருக்கும் கரூர் மாவட்டத்தில் காவிரி நீர்ப்பாசனம் மிகுதியாக உள்ள புகளூர் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால், புகளூர் பள்ள வாய்க்கால், (புகளூர் வட்ட பகுதிகள்); புகளூர் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால் மற்றும் நெரூர் வாய்க்கால் (மண்மங்கலம் வட்ட பகுதிகள்); மாயனூர் தடுப்பணையிலிருந்து ஆரம்பிக்கும் தென்கரை வாய்க்கால், பழைய கட்டளை உயர்மட்ட வாய்க்கால், புதிய கட்டளை உயர்மட்ட வாய்க்கால், மற்றும் கிருஷ்ணராயபுரம் வாய்க்கால்களால் பாசனவசதி பெறும் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்ட பகுதிகளுக்கும் காவிரி பாசன வசதி பெறும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் போன்ற காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை.

காவிரி டெல்டாவின் உள்ளடங்கிய காவிரி பாசனப் பகுதிகளாக கரூர் மாவட்டத்தில் காவிரி நீர்ப்பாசனம் மிகுதியாக உள்ள மேற்கண்ட பகுதிகளை அறிவிக்க வேண்டும்.மணப்பாறை முதல் தோகமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் ஆத்தூர் வரையில் தேசிய நான்குவழி சாலையாக தரம் உயர்த்தி அமைக்கும் திட்டம். முசிறி முதல் குளித்தலை, தோகமலை, மணப்பாறை மற்றும் விராலிமலை வரையில் உள்ள மாநில இரண்டுவழிச் சாலையை தேசிய நான்குவழி சாலையாக அமைக்கும் திட்டம். குளித்தலையில் நான்குவழி ரயில்வே மேம்பாலம் மற்றும் குளித்தலை-முசிறி இடையே காவிரியாற்றின் குறுக்கே கூடுதலாக ஒரு இரண்டு வழிச்சாலை பாலம் அமைக்கும் திட்டம் மற்றும் முசிறி முதல் துறையூர் மற்றும் ஆத்தூர் வரை சாலைகளை நான்குவழி சாலையாக அமைக்கும் திட்டம் வரும் 2026-2027 நிதியாண்டிலிருந்து அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: