அமெரிக்காவின் ரகசிய திட்டம்..! வெயிட் அண்ட் சி என ஈரான் நேரடி சவால்

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் உச்சத்தைத் தொட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இஸ்ரேலில், அமெரிக்கா தனது ராணுவ விமானங்களைக் குவித்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் உத்தரவிட கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுக்கு எதிராக விரிவான ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும், இதற்காக அமெரிக்கா வானில் எரிபொருள் நிரப்பும் டஜன் கணக்கான விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு டிரம்ப் ஒப்புதல் அளிக்கலாம் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இஸ்ரேலில் உள்ள பென் குரியின் விமான நிலையத்தில் சுமார் 30 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர தெற்கு இஸ்ரேலில் உள்ள ரமோன் விமான நிலையத்திலும் இதுபோன்ற விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், பென் குரியன் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா தனது எரிபொருள் நிரப்பும் விமானங்களை இயக்கும் என கூறப்படுகிறது. இந்த விமான நிலையம், ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து குறைவாக இருப்பதாக கருதப்படுவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கூடுதல் விமானங்களையும் அங்கு அனுப்ப அமெரிக்கா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கப் படைகளின் நடமாட்டத்தையும் ராணுவ உபகரணங்களையும் ஈரானின் கடற்படை பிரிவு தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் பொருளாதாரத்தை பாதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறோம். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் கடற்படை மையங்களுக்கு எதிராக ஈரான் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன. மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கையின் நேரம் நெருங்கி வருகிறது. “வெயிட் அண்ட் சி” என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: