டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் (Adjournment Motion Notice) அளித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் குறித்து மக்களவையில் அவசர விவாதம் நடத்த கோரி,திமுக எம்பி டி.ஆர்.பாலு இந்த ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
கர்நாடகா நிறைவேற்ற துடிக்கும் இந்த திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முக்கியப் பிரச்னையை அவையில் விவாதிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த நோட்டீஸ் மூலம் நாடாளுமன்ற மக்களவையின் வழக்கமான பொதுப் பணிகளை ஒத்திவைத்துவிட்டு, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மேகதாது அணை விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி உள்ளது.
மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று திமுக எம்பி-க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்க இருக்கும் நிலையில், திமுக சார்பில் இந்த ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
