சென்னை: கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு, விவசாயச் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அணைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த எதிர்ப்புகளைக் கண்டித்தும், மேகதாது அணைத் திட்டத்தை உடனே செயல்படுத்தக் கோரியும் கன்னட சலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடக-தமிழ்நாடு எல்லையில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால் அங்கு எந்தவிதமான பதற்றமான சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று இரு மாநில எல்லைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில எல்லைகளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் சேலம், தர்மபுரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூர் செல்லக் கூடிய பேருந்துகள் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதே போன்று கர்நாடாவில் இருந்து தமிழகம் இயக்கப்படும் பேருந்துகளும் அத்திப்பள்ளி கர்நாடக அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதியடைத்துள்ளனர். கர்நாடக சென்று இருந்து தமிழக அரசு பேருந்துகளும் நேற்று இரவே மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த போராட்டம் நிறைவு பெரும் வரை கர்நாடக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஓசூரிலிருந்து கர்நாடகாவின் மேகதாது அணை அமையவிருக்கும் பகுதி நோக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் நடைபயணம் மேற்கொண்டனர். ஆனால், அவர்களும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தமிழகத்தில், கர்நாடாகவில் போராடும் கன்னட அமைப்புகள் தமிழக பகுதிக்குள் நுழைந்துவிடாதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது தனியார் வாகனங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதால், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தொழில் என பல்வேறு காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கும் வரக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
