தொடர் மின்வெட்டை கண்டித்து தவெக எம்எல்ஏ வீடு முன் கோஷம்: 2 வாலிபர்கள் கைது

 

 

திருவெறும்பூர்: தொடர் மின்வெட்டை கண்டித்து திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ வீட்டு முன் கோஷமிட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திருவெறும்பூர் அடுத்த பூலாங்குடி காலனியில் உள்ள திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி வீட்டுக்கு பர்மா காலனி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் டேனியல்(20), பூலாங்குடி காலனி வடக்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் ரவி(23) ஆகியோர் சென்றனர்.

பின்னர் எம்எல்ஏ வீட்டு முன் நின்று இந்த பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது, இதை சரி செய்யாமல் என்ன செய்கிறீர்கள் எனக்கூறி எம்எல்ஏ நவல்பட்டு விஜியை திட்டியதோடு போதையில் கோஷமிட்டனர். இதுதொடர்பாக திருவெறும்பூர் தவெக மத்திய ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கர், நவல்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து டேனியல், ரவி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: