லக்னோ: உபி சட்டப்பேரவையில் அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் கொறடாவாக இருப்பவர் கமல் அக்தர். மொராதாபாத் மாவட்டத்தின் காந்த் தொகுதி எம்எல்ஏவான கமல் அக்தர், சமீபத்தில் அக்கட்சியின் எம்எல்ஏ மனோஜ் பாண்டே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கொறடாவாக நியமிக்கப்பட்டார். மாநிலங்களவைத் தேர்தலில் பாஜ வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் மனோஜ் பாண்டே அப்பதவியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் கமல் அக்தரும் நேற்று தனது கொறடா பதவியை ராஜினாமா செய்தார். அவர் கூறுகையில்,’ இனி இந்தப் பதவியில் பணியாற்ற வேண்டாம் என்றும், அந்தப் பொறுப்பை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் என் தலைவர் அகிலேஷ் யாதவ் என்னிடம் அறிவுறுத்தினார். இதனால் பதவி விலகி உள்ளேன். எனக்குக் கோபமோ அல்லது அதிருப்தியோ இல்லை ’ என்றார்.
