தி.மலையில் கிரிவலம் சென்றபோது பெண்களை நிர்வாணமாக்கி பணம் பறித்த 8 வாலிபர்கள் மீது ‘குண்டாஸ்’ பாய்ந்தது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவத்தில் 8பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு கிரிவலம் சென்ற தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் மற்றும் 31ம் தேதி இரவு கிரிவலம் சென்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்களை மிரட்டி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் மற்றும் நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, 2 சிறுவர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 9 செல்போன்களில் வீடியோ உள்ளிட்ட பதிவான முழு விவரங்களையும் மீட்டு எடுக்க சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வாசு என்கிற வாசுதேவன், ஆகாஷ், அப்பு, அரிகரன், ஷர்மா, சிவகணேசன், அருண்குமார், துரை ஆகிய 8 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்பி உதயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் வந்தனா கார்க் நேற்று 8பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கான ஆணை வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் 8 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: