ஊட்டி அருகே பசவக்கல் கிராமத்தில் மண் வளம், சமச்சீர் உரம் பயன்பாடு விழிப்புணர்வு

ஊட்டி : ஊட்டியில் உள்ள மண் மற்றும் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் மண்வளம், சமச்சீர் உர பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் நீர்வள பாதுகாப்பு நிறுவனம் ஆராய்ச்சி மையம், வேளாண் அறிவியல் மையம் ஆகியவை சார்பில் காய்கறி விவசாயிகளிடையே நிலையான ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், விவசாய நிலங்களை காப்போம் இயக்கம் திட்டத்தின் கீழ் ஊட்டிக்கு அருகிலுள்ள பசவக்கல் கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மண் வளம் மற்றும் பயிர் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, சமச்சீர் உரப் பயன்பாடு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் இயற்கை விவசாய முறைகள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே அதிகரிப்பதே இந்த முகாமின் நோக்கமாகும்.

மூத்த விஞ்ஞானி பிரபாவதி, காய்கறிப் பயிர்களில் சமச்சீர் உரமிடுதலின் முக்கியத்துவம் மற்றும் மண் வளம் குறித்தும், பயிரின் தேவைகள் மற்றும் மண்ணின் வளத் தன்மைக்கு ஏற்ப, அறிவியல் ரீதியிலான மற்றும் இடத்திற்கு ஏற்ற உரப் பயன்பாட்டின் அவசியத்தை குறித்தும் அவர் பேசினார்.

ஜீவாமிர்தம் போன்ற பல்வேறு இயற்கை விவசாய இடுபொருட்களைத் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் உள்ளிட்ட இயற்கை விவசாய முறைகளையும் அவர் செயல்விளக்கம் செய்து காட்டினார்.

வேளாண் அறிவியல் மையத்தை சேர்ந்த மண் அறிவியல் நிபுணர் தேன்மொழி மண் வளத்தைத் தக்கவைக்கவும், ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் கனிம உரங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பயன்பாட்டை வலியுறுத்தும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பண்ணைக்கழிவு மேலாண்மை மற்றும் இயற்கை உர உற்பத்திக்கான மட்கும் உரம் தயாரித்தல் குறித்தும் வலியுறுத்தினார். பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுகந்தி கலந்துகொண்டு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் மற்றும் வயலில் ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்க உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்துதல் குறித்து விளக்கமளித்தார்.

நிலையான மண் மேலாண்மை முறைகளைக் கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊட்டம் ஏற்றப்பட்ட காளான், மட்கும் உரம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் வழங்கப்பட்டன.

பசவக்கல் மற்றும் குருத்துகுளி கிராமங்களைச் சேர்ந்த சுமார் விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். விவசாயிகள் களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சியை மையத்தின் தலைவர் சோமசுந்தரம் ஜெயராமன் வழிகாட்டுதலின் கீழ், விஞ்ஞானிகள் ரஞ்சித், பொறியாளர் பிளஸ்ஸி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: