சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் ஓர் துயரமான நாள். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் 15 சதவீதம் அதாவது 22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர். 5 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்வர்கள் உள்ளனர்.
ஆனால், 2024ல் 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது, அதில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் இடம் தரப்படவில்லை. கேரளத்தின் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் குரியன் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இப்போது அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நீட்டிக்க பாஜக மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இதனால், ஒன்றிய அமைச்சரவையில் முஸ்லிம், கிறிஸ்தவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவையில் 30 கோடி மக்கள் கொண்ட இருபெரும் சமுதாயத்தின் சார்பில் யாரும் இடம்பெறாதது பெரும் அவலம். இந்திய அரசியலமைப்பின் உயிர்நாடியான மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு ஏற்படுத்தப்பட்ட இழுக்கு. இதைவிட சிறுபான்மையினரை யாராவது புறக்கணிக்க முடியுமா? அவமானப்படுத்த முடியுமா?
முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் பாஜகவில் உள்ளனர். சிறுபான்மையினர் அணியும் அக்கட்சியில் உள்ளது. ஆனால், அவர்களில் ஒருவருக்கு பெயரளவுக்கு கூட அமைச்சரவையில் இடம்கொடுக்க பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைமைக்கும் மனமில்லை. இதை சர்வாதிகாரம், பாசிசம், சிறுபான்மையினர் விரோதப் போக்கு இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
