சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும்.
இஎஸ்ஐ, பி.எப் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் பணிப்பாதுகாப்பு வசதிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மக்களின் சுகாதாரத்திற்கும், நகரங்களின் தூய்மைக்கும் முக்கிய பங்காற்றும் தூய்மை பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.
எனவே, மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அத்துடன், தற்போது பணியாற்றி வரும் ஒப்பந்த மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிடவும், அவர்களின் ஊதியத்தை உயர்த்திடவும், தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
