சென்னை: நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து ரஜினிகாந்துடன், நயினார் நாகேந்திரன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று (நேற்று) சென்னை போயஸ் தோட்டத்தில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்தை பாஜ தேசிய செயலாளரும், தமிழக பாஜவின் மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனனுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம். இந்நிகழ்வில், பாஜ மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாநில பிரசார பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் உடனிருந்தனர். இவ்வாறு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
