நாடு முழுவதும் மொத்தமுள்ள 4,123 எம்.எல்.ஏக்களில் பாஜக கூட்டணியின் பலம் 61.36% ஆக அதிகரிப்பு: ‘இந்தியா’ கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை சரிவு

 

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள மாநில சட்டசபைகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது செல்வாக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தனது நிலையை வலுப்படுத்திய பாஜக, தற்போது நாடு முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட மாநிலங்களிலும் பாஜகவின் வியூகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, அங்கு பாஜகவின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, நாடு முழுவதும் உள்ள மொத்த 4,123 எம்.எல்.ஏக்களில் பாஜகவின் பங்கு 37.16 சதவீதத்தில் இருந்து 43.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு 1,532 ஆக இருந்த பாஜக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தற்போது 1,813 ஆக அதிகரித்துள்ளது. ஒன்றிய பாஜக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த பலம் 50.84 சதவீதத்தில் இருந்து 61.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த கூட்டணியின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 2,096ல் இருந்து 2,530 ஆக உயர்ந்துள்ளது. இதில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 36 இடங்களையும், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி 20 இடங்களையும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 19 இடங்களையும் கூடுதலாகப் பெற்று கூட்டணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

குறிப்பாக மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பெற்ற வெற்றி, ஆளுங்கட்சியின் பலத்தை தேசிய அளவில் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சிக்கு பெரும் சாதகமான சூழல் நிலவும். மறுபுறம் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலின் போது 1,603 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்த இந்தக் கூட்டணி, தற்போது 1,011 இடங்களாகக் குறைந்து 24.52 சதவீத பலத்தை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் எந்தக் கூட்டணியிலும் சேராத கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. திமுக மற்றும் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது பெரிய அடியாகக் கருதப்படுகிறது.

 

Related Stories: