திருவனந்தபுரம்: கேரளாவில் அரசுப்பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதலமைச்சர் வி.டி.சதீசன் எர்ணாகுளத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF), சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான(KSRTC) பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தது. இது ‘பிரியதர்ஷினி’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதையடுத்து கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்தில் பயணச் சலுகை வழங்க மாநில அமைச்சரவை முடிவு செய்தது. இதன்படி கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘பிரியதர்ஷினி’ திட்டத்தை முதலமைச்சர் சதீசன் இன்று தொடங்கி வைத்தார். 7 வகையான சாதாரண பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
அந்த பேருந்துகளை அடையாளம் காண அவற்றில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படும். இதன்படி சாதாரண அரசு பேருந்து, நகர பேருந்து, நிறுத்தங்கள் வரையறுக்கப்பட்ட சாதாரண அரசு பேருந்து, சீர்நிலை சாதாரண அரசு பேருந்து, டவுன் டூ டவுன் பேருந்து, பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து மற்றும் கிராமவாண்டி சேவைகள் ஆகிய பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தொடக்க விழாவில் வி.டி. சதீசன் பேசியதாவது; இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் சுமார் ரூ. 800 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. KSRTC-யின் வருவாயை அதிகரிப்பதில் அதன் ஊழியர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கவலைகளைத் தெரிவித்திருந்தாலும், அவர்களும் பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவே உள்ளனர். அரசுப் பேருந்துகள் இயங்காத பல பகுதிகளில் மக்கள் தனியார் பேருந்துகளையே நம்பியுள்ளனர். அவர்களின் பங்களிப்பை மேலும் உறுதி செய்வதற்கான வழிமுறைகளை அரசு அறிமுகப்படுத்தும். எந்தவொரு துறையும் வீழ்ச்சியடையக் கூடாது.
அதேவேளையில், சிரமங்களை எதிர்கொள்ளும் துறைகளுக்கு ஆதரவளிப்பது அரசின் கடமையாகும். ‘பிரியதர்ஷினி’ திட்டம் என்பது கேரளப் பெண்களுக்கு அரசு அளிக்கும் மரியாதையின் அடையாளமாகும். சமூகத்தில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான செய்தியாகவும் இது அமைகிறது. பிரியதர்ஷினி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான உத்தரவில் ஒரு பெண் செயலாளரே கையெழுத்திட்டுள்ளார் எனத் தெரிவித்தார். கேரள மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவசமாக பயணிக்கலாம் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
