சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் செய்து கொலை செய்தபோது எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை? என்று எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூகவலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத சோதனை காலம் முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்? ‘அதிகாரிகளை நியமித்துவிட்டேன்.
இனிமே எல்லாம் மாறிவிடும்’ என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? குழந்தை பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது படம் காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, தீவிரத்தன்மையை புரிந்து சட்டம் ஒழுங்கை காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
