சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி 31வது இளங்கலை மாணவர்களுக்கான மருத்துவப் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ், 98 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: மருத்துவம் ஒரு தொழிலாக மாறிவிட்டதை மறுக்க முடியாது. நீட் தேர்வு இருக்க கூடாது, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றிற்கு எதிராகத்தான் இருக்கிறோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், வந்தபிறகும் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.
ஆனாலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்வது அவசியமானது. அரசு மருத்துவமனைகள் தரமானதாக இல்லை என்பதை மறுக்க முடியாது. நான் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்தேன். அந்த நாட்களை மறக்க முடியாது. ராகிங் அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். 1997 காலக்கட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்யப்பட்டபிறகு ராகிங்கை அரசு தடை செய்தது.
உடனடியாக 90 சதவீதம் நின்றுவிட்டது. அதேநேரத்தில் ராகிங் என்ஜாய்புல்லா இருக்கும். சீனியர் மாணவர்கள், நமக்கொரு அடிமை கிடைத்து விட்டான் என நினைத்து, ரெக்கார்டு எழுத சொல்வார்கள், டிக்கெட் புக் செய்யச் சொல்வார்கள். சோப்பு வாங்கி வர சொல்வார்கள், ஓட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கி வருமாறு கூறுவார்கள். அது ஒரு என்ஜாயாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சரே ராகிங் காலக்கட்டங்கள் மகிழ்ச்சியாக இருந்தது என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
